வேளாண்மை


உயர் விளைச்சல் என்னும் மயக்கத்தில் இடுபொருட்களை அதிகப்படுத்தி உழவர்கள் கடனில் சிக்கித் தவிப்பதும், வேதி விவசாயத்தால் மண் உயிரற்று மலடாய்ப் போவதும், பூச்சிக் கொல்லி விஷங்களால் பெருகும் பல நோய்களும் தற்கால வேளாண்மையில் நிதர்சனம். விவசாயம் ஒரு தொழில் அல்ல என்று கிட்டத்தட்ட அனைவருமே முடிவு செய்துவிட்ட சூழலில், விவசாயத்தை இவ் வீழ்ச்சியிலிருந்து மீட்கவும், உழவர் விடுதலைக்குப் பாடுபடவும் நம் இயக்கம் பெரும் முனைவு கொண்டுள்ளது.

மாதிரிப் பண்ணைகள்


ஒரு குடும்பம் பாரதி கனவு கண்ட காணி நிலத்தில் எவ்வாறு ஒரு நல்வாழ்க்கை வாழ இயலும் என்று செயலில் ஆராய்வது நம் களப்பணிகளில் முக்கியமான ஒன்றாகும். இது பற்றி நம் தாளாண்மை இதழில் 'கெடு முன் கிராமம் சேர்' என்று ஒரு தொடர் வெளியிடுகிறோம். இக்கருத்தை நடைமுறைப் படுத்திக் காட்ட காணி நிலத்தில் மாதிரிப் பண்ணைகள் உருவாக்க நம் இயக்கம் செயல் முனைவுகளில் இறங்கி இருக்கிறது. இதன் நேரடி முடிவுகளை நீங்கள் எங்கள் இணைய தளத்தில் விரைவில் காணலாம்.

உழவர் சேவை மையங்கள்


செயற்கை வேளாண்மையிலிருந்து இயற்கை வழி விவ்சாயத்திற்கு மாற விழையும் உழவர்களுக்கு உதவுவதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும், உழவர் சேவை மையம் ஒன்றை அமைப்பதாக தற்சார்பு இயக்கம் முடிவு செய்துள்ளது. இதில் இயற்கை உரங்கள், மூலிகைப் பூச்சி விரட்டிகள், பஞ்ச கவ்வியம் போன்ற பயிர் ஊக்கிகள், பாரம்பரிய விதைகள் போன்றவை குறைந்த விலையில், அண்மையில் உழவர்களுக்குக் கிடைக்க வழி செய்யப்படும். முதல் முயற்சியாக, விழுப்புரம் திருக்கோவிலூர் வட்டத்திலும், திருநெல்வேலி, அம்பா சமுத்திரம் வட்டத்திலும் உழவர் சேவை மையங்கள் நிறுவும் பணி ஆரம்பித்துள்ளோம்.